அடியார்களுக்காக சிவபெருமான் அருள் செய்த திருவிளையாடல்கள் பலப்பல.
“மாணிக்கவாசகருக்கு – காலைக் கொடுத்தார். திருநாவுக்கரசருக்கு – சூலை கொடுத்தார். திருஞானசம்பந்தருக்கு – பாலைக் கொடுத்தார். சுந்தரருக்கு – ஓலை கொடுத்தார்” என்று அழகாகச் சொல்வார் வாரியார் சுவாமிகள்.
இந்த நால்வரிலும் தலைசிறந்த பெருமை மாணிக்கவாசகருக்குத்தான். எப்படி? மற்ற மூவருக்காகவும் சிவபெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியிருந்தாலும், மாணிக்கவாசகருக்காக மட்டுமே பாண்டிய மன்னரின் கைப்பிரம்பால், தானே அடிபட்டார்.
அடுத்து, மாணிக்கவாசகரின் திருவாசகத்தைத் தம்முடைய திருக்கைகளால் எழுதினார் என்றால், மாணிக்கவாசகரின் பெருமை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்!
ஒரு நாள்… தூய தோற்றம் கொண்ட வேதியர் ஒருவர், மாணிக்க வாசகரிடம் வந்தார்.
“மாணிக்கவாசகரே! நீங்கள் பாடிய திருவாசகங் களை எல்லாம் ஏட்டில் எழுதவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. தடை சொல்லாமல் நீங்கள் பாட வேண்டும்; நான் எழுதிக்கொள்வேன்” என்றார். மாணிக்கவாசகரும் இணங்கி திருவாசகப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். வேதியர் அப்பாடல்களை அப்படியே எழுதினார்.
எழுதி முடித்ததும் அங்கிருந்து நகர்ந்த அந்த வேதிய வடிவம் மறைந்தது. மாணிக்க வாசகர் திடுக்கிட்டார்; வந்தது தில்லை அம்பலவாணர் என்பதை அறிந்து ஆனந்தத்தில் ஆழ்ந்தார்!
அம்பலவாணரோ, தாம் எழுதிய மாணிக்கவாச கரின் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை, சிற்றம்பலத்தின் பொற்படிகளில் வைத்து அருளி னார். மறுநாள் பொழுது புலரும் வேளையில் தில்லைவாழ் அந்தணர்கள், அந்த திருவாசகச் சுவடிகளைக் கண்டார்கள்.
அதில், `மாணிக்கவாசகன் சொல்லப் பொன்னம்பலவன் எழுதியது’ எனும் இறைவனின் கையெழுத்தையும் கண்டு வியந்தார்கள். பாடல்களை ஊன்றி ஓதினார்கள்; பொருள் விளங்கவில்லை. ஆகவே, மாணிக்கவாசகரிடமே வந்து, பொருளைக் கூறும்படி வேண்டினார்கள்.
இறைவனின் திருவுள்ளம் அறிந்த மாணிக்க வாசகர், “வாருங்கள்! இந்தப் பாடல்களின்பொருளை அம்பலவாணர் முன் காட்டுகிறேன்” என்றார். அனைவரும் அம்பலத்தை அடைந் தார்கள். அன்று ஆனி மாதம் மகம் நட்சத்திரம். அம்பலத்தை நெருங்கிய மாணிக்கவாசகர், “இப்பாடல்களின் பொருள் இவரே!” என்று கூறியபடியே அம்பலத்தில் புகுந்தார்.
ஒளி வெள்ளம் பொங்கி எழுந்தது. அதற்குள் நுழைந்த மாணிக்கவாசகர் அம்பலவாணருடன் இரண்டறக் கலந்தார்.
இத்தகைய சிறப்புகள் பெற்ற திருவாசகம் அடியார்போல நடிக்கும் ஒருவனுக்கு என்ன கிடைக்கும் என்பது பற்றிச் சொல்கிறது. இந்த அற்புதமான வரியை விளக்கும் சுமதிஶ்ரீ இதற்கு உதாரணமாக ஒரு நிஜக் கதையையும் இன்றைய தினந்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் எடுத்துக்காட்டுகிறார். அதை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைக் காணுங்கள்.