வர்த்தக ரீதியில் ‘பான்-இந்தியா’ வகையிலான பெரிய படத்தில் இணையவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ்.
சமீபத்தில்தான் பிரித்விராஜ் மீண்டும் இயக்குநராக மாறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். இந்த நிலையில்தான் மீண்டும் மோகன்லாலை வைத்து இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, இப்போது தனது முதல் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் அவர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு பான்-இந்தியா படத்தில் தான் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்தத் திட்டத்தில் இந்தியாவின் பெரிய நட்சத்திரங்கள் இணையவிருப்பதாக கூறியுள்ளார். என்றாலும், அவர்களின் விவரங்களை வெளியிட அவர் மறுத்து, படத்தின் தயாரிப்பாளர் இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று தெரிவித்தார். நடிகர் – திரைப்படத் தயாரிப்பாளர் விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்திருந்தாலும், அது அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தினார்.
கடந்த இரண்டு வாரங்களாக, பேசப்பட்டு வரும் ஒரு செய்தி, பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் பிரித்வி நடிக்க வாய்ப்புள்ளது என்பதுதான். இந்தப் படத்தை ‘கேஜிஎஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். அதேபோல் கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 படத்தையும் இயக்கி வருகிறார். கே.ஜி.எஃப் படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை கைப்படுத்தியிருப்பவர் பிரித்விராஜ்தான். இதற்கான பேச்சுவார்த்தையின்போது இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தன்னுடன் ஒரு திட்டத்திற்காக இணைவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக ஏற்கெனவே பிரித்விராஜ் குறிப்பிட்டிருந்தார். இதுவே பிரித்விராஜை ‘சலார்’ படத்தில் சேர்ப்பது தொடர்பான ஊகங்களுக்கு வழி வகுத்தது.
இந்நிலையில், பிரித்விராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோல்ட் கேஸ்’ படம் ஜூன் 30 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட இருக்கிறது. படத்தில் மர்மமான கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஏ.சி.பி சத்யஜித் வேடத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.