சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தந்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் அம்ரிஷ்.
“2013-ம் ஆண்டு அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களிடம் அரிய வகை இரிடியம் இருப்பதாகவும், அவற்றை வெளிநாட்டில் அதிக விலைக்கு விற்கலாம் என்றும், அதற்கு முதலில் முதலீடு தேவை என்றும் கூறினர். அவர்களது பேச்சை நம்பி 26 கோடி ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் போலியான ஒரு பொருளை இரிடீயம் எனத் தந்து என்னை ஏமாற்றி விட்டனர்” என்பதுதான் நெடுமாறன் ஜனவரி மாதம் தந்த புகார்.
நெடுமாறன் ஷூட்டிங் ஹவுஸ் வாடகைக்கு விடுபவர் என்றும், அவரது ஷூட்டிங் ஸ்பாட்டில் படங்களுக்காக பணிபுரிந்த போதே அம்ரிஷுக்கும் அவருக்கும் பழக்கம் உண்டானது என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அம்ரிஷ் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஜெயசித்ராவிடம் கேட்டேன்.
‘’ஆமாங்க. வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமா இன்னைக்கு நடந்த விசாரணையின் தொடர்ச்சியா சென்னை உயர்நீதிமன்றத்தால் அம்ரிஷ்க்கு எதிராப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமாள், விநாயகருக்கு நன்றி சொல்லணும்’’ என்றார் அவர்.