திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி புகாரளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடோடிகள் பட காட்சியில் மட்டுமின்றி நிஜத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் திரைப்பட நடிகை சாந்தினி. முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது இவர் முன்வைத்திருக்கும் பகிரங்க பாலியல் குற்றச்சாட்டுகள் தான், அந்த பரபரப்புக்குக் காரணம். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வழக்கறிஞருடன் சென்ற அவர், மணிகண்டன் மீது புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார். நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான சாந்தினிக்கு, மலேஷியா தான் பூர்வீகம்.

கடந்த 2017ஆம் ஆண்டு பணி நிமித்தமாக சென்னை வந்த போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறுகிறார், சாந்தினி. பின்னர், நெருங்கிப் பழகத் தொடங்கிய நிலையில், தம் மீது காதல் வயப்பட்ட மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறியிருக்கிறார். நெருங்கிப் பழகியதன் விளைவாக தாம் 3 முறை கருவுற்ற நிலையில், தம்மை வலுக்கடாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதோடு, தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் அச்சுறுத்துவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

குற்றச்சாட்டுகளும், புகார்களும் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபோனில் உரையாடிதற்கான ஆதாரங்களையும் சாந்தினி வெளியிட்டிருக்கிறார். இவ்விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் விளக்கத்தைக் கேட்க அவரை தொடர்பு கொண்டது புதிய தலைமுறை. ஆனால், நடிகை சாந்தினியை யார் என்றே தனக்குத் தெரியாது என மறுப்பு தெரிவித்திருக்கிறார், மணிகண்டன். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அந்தப் பெண் யார் என்றே தெரியாது. புகைப்படங்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தல் வெளியே சொல்ல மாட்டோம் என அந்தக் கும்பல் கூறியது. நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. 3 கோடி ரூபாய் கொடு. 2 கோடி ரூபாய் கொடு.30 லட்சம் ரூபாய் கொடு என என்னிடம் பேரம் பேசினர். தவறு செய்தவர்கள் பயப்பட வேண்டும். நான் ஏன் பயப்பட வேண்டும்” என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் விசாரணைக்கு பின்னரே உண்மை நிலை தெரியவரும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.