தமிழக அரசு சார்பில் ஊரடங்கில் மேலும் பலவிதக் கட்டுப்பாடுகள் இன்று 14/05/21 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அனுமதிக்கப்பட்ட மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. முந்தைய அறிவிப்பில், தேநீர் கடைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி, இன்றைய அறிவிப்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஹோட்டல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப் படவில்லை. அதாவது தினமும் பார்சல் மட்டும் வழங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது.
அது தொடருமா இல்லையா என்று புதிய அறிவிப்பில் எந்தத் தகவலும் இல்லை. அதேபோல தினமும் மூன்றுவேளையும் பார்சல் மூலம் உணவு வழங்கும் ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற நிறுவனங்களும் அனுமதி உண்டா என்று தெரியவில்லை.
அதேசமயம், இ-வணிகத்துக்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய அனுமதிக்கப்படும் என்று இடைசெருகல் ஒன்றும் நடந்துள்ளது.
இ-வணிகம் என்றால் என்ன? இவர்கள் யாருக்கு சேவையாற்றுவார்கள் என ஒன்றும் விளங்கவில்லை. இ-வணிகம் என்பதுதான் பார்சல் உணவக ஆப்களுக்கான அனுமதி என்றால், திறக்காத உணவங்களில் இருந்து எப்படி, யாருக்கு பார்சல் வாங்குவது?
மொத்தத்தில் ஊரடங்கு பற்றிய புதிய அறிவிப்பு ஏகப்பட்ட குழப்பத்தையே உருவாக்கியுள்ளது.
`நாங்கள் உணவங்களைத் திறப்பதா.. வேண்டாமா என்று எதுவும் புரியவில்லையே’ என்று புலம்புகிறார்கள் உணவக உரிமையாளர்கள்.
ஆகக்கூடி ஆளாளுக்கு உப்பு போட்ட கதையாக பலரும் தங்களுக்குச் சாதகமாக அரசாங்கத்தை திசை திருப்பி, விருப்பம்போல உத்தரவுகளை வரவைத்துக் கொண்டுள்ளனர் என்கிற குமுறல்களும் கேட்கின்றன.