சென்னை ஆலந்தூரை அடுத்த மடிப்பாக்கம் கைவேலி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி(42) சலவை தொழிலாளி. இவருடைய மனைவி பாா்வதி (34). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக போதிய வருமானம் இல்லாமல் பாண்டியின் குடும்பத்தினர் சிரமப்பட்டு வந்தனர். பாண்டிக்கு குடிப்பழக்கமும் இருந்ததால் கணவன்,மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த பாண்டி, மனைவியை அடித்துள்ளார். பின்னர் மதுபோதையில் பாண்டி வீட்டில் படுத்து தூங்கியிருக்கிறார். அப்போது பாா்வதி, ஒரு கேனிலிருந்த பெட்ரோலை எடுத்து பாண்டி மீது ஊற்றி தீவைத்து விட்டு வெளியே வந்துவிட்டாா். பாண்டி வெளியே வராதபடி கதவை பூட்டி விட்டார். பின்னர் பார்வதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
Also Read: சென்னை: பிரிந்துபோன காதல் கணவர்; ஆண் நண்பரின் சந்தேகம்! – கொலை செய்யப்பட்ட பெண்!நடந்தது என்ன?
பாண்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பாண்டியின் உடலில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், பாண்டியைக் காப்பாற்றி, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பாண்டி இன்று உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து மடிப்பாக்கம் போலீஸார் பாண்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பாண்டி மரணம் குறித்து அவரின் மனைவி பார்வதியிடம் போலீஸார் விசாரித்தனர். முதலில் பாண்டி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பார்வதி கூறினார். தீவிர விசாரணையில் பாண்டியைக் கொலை செய்தததை பார்வதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியின் உடல்நலம் நேற்று இரவு மிகவும் மோசமானது. அதனால் சென்னை எழும்பூா் விரைவு நீதிமன்ற நீதிபதி, பாண்டியிடம் விசாரித்தார். அப்போது அவர், தனது மனைவி பார்வதிதான் தன்னை பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு, வீட்டுக் கதவை வெளியே பூட்டிவிட்டாா் என்று மரண வாக்குமூலம் அளித்தார். அதன்அடிப்படையில்தான் பார்வதியைக் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.