‘நெகடிவ் சான்றிதழ்’ கட்டாயம்!
கடந்த சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதால் இம்முறை வாக்கு எண்ணும் பணி நள்ளிரவு வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை பணியில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியிருக்கிறது. அதன் படி, வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி தொடர்பான அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
அவர்களுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ‘நெகடிவ் சான்றிதழ்’ அல்லது ‘2 டோஸ் தடுப்பூசி’ செலுத்திக் கொண்டதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே அனுமதி. உடல் வெப்பநிலை 98.6 பாரன் ஹீட்டுக்கு மேல் உள்ளவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்தல் பணியாளர்கள், மற்றும் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுபவர்கள் ஒரு முறை வெளியில் வந்து விட்டால் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
1 லட்சம் போலீஸார்:
வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறமால் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கட்சி அலுவலகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இல்லங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் அமர்த்தப்பட உள்ளனர். வாக்குச் சாவடியில் பணியில் ஈடுபடவிருக்கும் போலீஸார் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணும் மையங்கள்:
234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுப் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்பட இருக்கின்றன. தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, மெரினா ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் எண்ணப்பட உள்ளது.
8.00 – 12.00 :
தமிழகம் முழுவதும் 75 மையங்களில் சரியாக 7.30 மணிக்குத் தேர்தல் அலுவலர்கள் வந்து விடுவார்கள். 8.00 மணிக்குத் தபால் ஓட்டுகள் மற்றும் தபாலில் வந்த ஓட்டுகள் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும். ஒரு மேஜையில் அதிகபட்சமாக 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 4 மேஜைகளில் தபால் ஓட்டுக்களை எண்ணத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும், பதிவான வாக்குகளை வாக்கு எண்ணும் அலுவலர் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் அவரவர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கையைச் சப்தமாகத் தெரிவிப்பார். வாக்கு எண்ணும் அறைக்கு வெளியில் எல்.இ.டி திரையில் ஒவ்வொரு சுற்றின் வாக்கு விபரங்கள் திரையிடப்படும். கடந்த சட்டசபைத் தேர்தலை விடவும் இம்முறை கூடுதல் வாக்குச் சாவடிகள் என்பதால் வாக்கு எண்ணிக்கை பணியானது நள்ளிரவு 12 மணி வரையிலும் நடைபெறும். தேர்தல் பணியாளர்கள் முடிந்த வரையில் 12 மணிக்குள் வாக்கு எண்ணிக்கையினை முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
கொண்டாட்டங்களுக்குத் தடை!
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக வாக்குச்சாவடி அருகில் மக்கள் மக்கள் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் தடையை மீறி வாக்குச் சாவடிக்கு வருகை புரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வார்கள். தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளின் கொண்டாட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன் காரணமாக, வெற்றிபெறும் வேட்பாளருடன் சான்றிதழைப் பெறுவதற்கு 2 பேருக்கு மேல் வந்தால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
234 தொகுதிகளில் களமிறங்கியிருக்கும் 3,998 வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் 6,28,69,955 தமிழக வாக்காளர்களின் முடிவு என்ன என்பதனை நொடிக்கு நொடி துல்லியமான கள நிலவரங்களுடன் அறிந்துகொள்ள விகடன்.காம்-ல் இணைந்திருங்கள்..
Also Read: தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அடுத்த முதல்வர் யார்… மக்கள் தீர்ப்பு என்ன?! #TNElections2021