மரக்கன்றுகளை நட்டு முன்மாதிரியாக திகழும் ராமநாதபுரம் பட்டதாரி ஆட்டோ ஓட்டுநருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது உலக அமைதி பல்கலைக்கழகம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகர் பகுதியில் வசித்துவரும் ஆட்டோ ஓட்டுனர் சாகுல் ஹமீத் ஒரு எம்பிஏ பட்டதாரி. இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் கனவான ’’பசுமை இந்தியா திட்டத்தை உருவாக்குவோம்’’ என்ற கனவை அவர் மறைந்த பிறகு கையில் எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக உருவாக்கும் திட்டத்தில் பல்வேறு வகையான மரங்களை நட்டு வருகிறார். இவரிடம் தொடர்பு கொண்டு இலவசமாக ஏராளமானோர் மரக்கன்றுகளை பெற்றுள்ளனர்.
ஒரு மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்களில் மரங்களை வைத்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடும் சேவையில் ஈடுபட்டிருந்தார். இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் ரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு 24 மணி நேரமும் இவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எப்படியாவது அவர்களுக்கு ரத்தத்தை நண்பர்கள் மூலமாக ஏற்பாடு செய்து விடுவாராம்.
இவருடைய சேவையை கடந்த நான்கு வருடங்களாக கண்காணித்து வந்த சென்னை உலக அமைதி பல்கலைக்கழகத்தை (GLOBAL PEACE UNIVERSITY)சேர்ந்த குழு இவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முடிவு செய்து கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக அமைதி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது.
மேலும் நாள்தோறும் ஆட்டோ ஓட்டினால் ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதிலிருந்து மரங்கள் வாங்குவதற்காக தினந்தோறும் 200 ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்த பணத்தை வைத்து மா, பலா, வேம்பு , புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை வாங்கி அவரது ஆட்டோவில் வைத்துக்கொண்டு இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்தும் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றார்.
பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் சாகுல்ஹமீத்தை தொடர்புகொண்டு இலவசமாக மரக்கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் தமிழகத்திலேயே எந்த ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது கிடையாது. தமிழகத்தில் முதல் முறையாக டாக்டர் பட்டம் பெறுபவர் என்ற பெருமையை சாகுல்ஹமீது பெற்றுள்ளார்.