நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்படத்தின் இயக்குநர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட மனுவில் “மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்ததாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைபடம் ஏப்ரல் 4ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.
இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பதும், காரில் ஏற அறுகதை இல்லை என காரின் பின்னே ஓடி வர சொல்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டது” என மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்படத்தின் இயக்குநர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.