கடந்த அத்தியாயத்துக்கு வந்த கடிதங்களில் ஒன்று, ‘தொடர்ந்து சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளே இடம்பெறாமல் மெட்ராஸ் பற்றிய வேறு தகவல்களைத் தரலாமே’ எனக் குறிப்பிட்டிருந்தது.

சென்னை மாகாண முதல்வராக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்த காலம் தொட்டே ஆட்சியாளருக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் இருக்கத்தான் செய்தது. தீரர் சத்யமூர்த்தி சினிமாவோடு தொடர்பில் இருந்தார். அதன்பிறகு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என தமிழக அரசியல் இன்றுவரை சினிமாவால் நிரப்பப்பட்டதாகவே இருக்கிறது. எதாவது ஒரு விதத்தில் சினிமாவைத் தொட்டுச் செல்லாமல் தமிழகத்தின் சரித்திரத்தைச் சொல்ல முடிவதில்லை. அதிலும் குறிப்பாக சென்னையின் சரித்திரம்.

வாசகர் விருப்பம் கருதி, சினிமா உருவாகாத அந்தக் காலத்தை நோக்கி கொஞ்சம் முன்னோக்கிப் பயணித்தேன். இது சென்னை மக்களின் உறவோடும் உதிரத்தோடும் சம்பந்தப்பட்ட ஒரு மில்லின் சரித்திரம். சென்னையின் வரலாற்றில் பி அண்டு சி மில் என அழைக்கப்பட்ட பக்கிங்காம் அண்டு கர்னாடிக் மில் என்ற பின்னி மில்…

1900-களில் சுமார் 20,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிய மாபெரும் வாழ்வாதாரமாக விளங்கியது. பிரிட்டிஷ்காரரான பின்னி என்பவர் தொடங்கிய ஆலை இது.

சுமார் ஒரு லட்சம் குடும்ப உறுப்பினர்கள் அந்த ஒரு மில்லை நம்பி இருந்தனர். அன்றைய சென்னையின் ஜனத்தொகையில் அது கணிசமானது. வட சென்னை மக்களின் மாபெரும் பழக்க வழக்கக் காரணியாகவும் அந்த மில் இருந்தது.

எனக்கு 70-களின் தொடக்கத்தில் இருந்து அந்த மில் பழக்கம். அந்த ஆலையில் ஒலிக்கும் சங்கின் ஓசையைக் கேட்டு வளர்ந்தவன். மூன்று ஷிப்டுகள். ஆலைச் சங்கு தினமும் ஆறு முறை முழங்கும். ஓட்டேரி, குசப்பேட்டை, பட்டாளம், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அந்த மில்லின் தொழிலாளர்கள் வசித்தனர். மில் இடைவேளையின் போது, சாப்பாடு எடுத்துச் செல்லும் மனைவிமார்கள், குழந்தைகள் பதற்றமாக மில்லை நோக்கி ஓடுவதைப் பார்ப்பேன்.

தொழிலாளர்களின் வீடுகளில் வாடியா, திரு.வி.க. புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். காரணம் இந்த மில்லின் ஆரம்பகால தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்கள்தான். இந்தியாவின் முதல் தொழிற் சங்கம் பின்னி மில் தொழிற் சங்கம்தான் என்பது இங்கு பதியப்பட வேண்டிய செய்தி . எப்போதும் அவர்கள் குடும் பங்களில் மில்லைப் பற்றிய பேச்சு இருக்கும்.

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, வேலை நிறுத்தம், மில்லில் நடக்கும் கெடுபிடி, அங்கு நடந்த சுவாரஸ்யம் தான் அவர்களிம் பேச்சில் முக்கியப் பங்கு வகிக்கும். ஷிப்டு, சாப்பாடு, தொழிற் சங்கத் தலைவர் குசேலர், சுப்பு இப்படித்தான் பேச்சு இருக்கும். அந்த மில்… அந்தத் தொழிலாளர்களின் வாழ்வின் அங்கம், கலாசாரமாக மாறியிருந்தது.

1921-ல் நடந்த தொழிற்சங்கப் போராட்டம் சாதிப் போராட்டமாக மாறியது, உலக வரலாற்றில் இந்திய சாதி அமைப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பிரிவாகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அணியாகவும் மாறினர். பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர். தலித் மக்கள் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தனர். அது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்தியாவின் முதல் தொழில் சங்கத்தில் இப்படித்தான் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

அப்போது திரு.வி.க. இரு தரப்பு மக்களுக்கும் பாலமாக இருந்து அந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டிஷ் நிர்வாகம் இந்திய முதலாளிகள் கைக்கு மாறியது. பிரதானமாக ராணுவத்துக்கான துணிகளை நெய்தது அந்த நிறுவனம். பிறகு ராணுவத்திலேயே குளோத்திங் ஃபேக்டரிகள் உருவானதாலோ, என்னவோ பெரும் சந்தை வாய்ப்பை இழந்தது. பின்னி போர்வைகள் பெரும் மவுசுடன் விற்பனை ஆகின. மலையூர் மம்பட்டியான் படத்தில் நடிகர் தியாகராஜன் போர்த்தியிருக்கும் போர்வை பின்னி போர்வைதான்.

பின்னி நிறுவனம் தனியாக துணிக்கடைகள் நடத்தியது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் துணிகள் விற்பனை செய்தது. நான் 70-களில் அதன் தேய்மானக் காலத்தில்தான் அந்த மில்லை பெரும்பாலும் பார்த்தேன். சொல்லி வைத்ததுபோல ஒரு பெரு மழையில் அந்த மில்லில் வெள்ளம் புகுந்து துணிகள் எல்லாம் பாழாகின. இயந்திரங்கள் பழுதாகின. மில்லை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் இந்திரா, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தொழிற் சங்கத் தலைவர்கள் எல்லோரும் அந்தத் தொழிலாளர்கள் பிரச்னையைத் தீர்க்க ஆலோசித்தனர். அது கொடுமையான காலகட்டம். பல தொழிலாளர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்தனர். பலர் தற்காலிக வேலைகளுக்குச் சென்று பசியாறினர். அதன்பிறகு மில்லை திறப்பதும் மூடுவதும் ஆட்களைக் குறைப்பதும் என பல்வேறு சோதனைகளூடே லட்சக்கணக்கானோர் உழன்றனர்.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமும் ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த மில், அதைச் சுற்றியிருந்த அவர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் நகரத்தின் மாபெரும் அடையாளமாக இருந்தது.

அதனுள்ளே பகிங்காம் கால்வாய் ஒன்று செல்லும் அதில் படகுகள் மூலம் சரக்குகள் வருவதும் போவது மாக இருக்கும். மில்லுக்குள் சரக்குகளை ஏற்றி வரவும் நிலக்கரிகளை இறக்கிவிட்டுச் செல்லவும் ரயில் உள்ளே செல்லும். ரயில், படகு, லாரிகள் என அந்த மில் பரபரப்பாக இருந்த காட்சிகள் நினைவில் மிச்சம் இருக்கின்றது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் ரஜினியும் ஸ்ரேயாவும் ‘பில்லா ரங்கா பாட்ஷாதான்… என் பிரிஸ்டல் பேசும் பேஷாதா’ என்று சுட்டு சுட்டு வீழ்த்திக் காதல் பாட்டுப் பாடும் பாடல் அந்த மில்லில் தான் படமாக்கப்பட்டது. பிரம்மாண்டமான கோட்டை, ஜெயில், பாழடைந்த மாளிகை போன்ற லொகேஷன் களுக்கு சினிமா எடுப்பதற்கு அங்கு செல்கிறார்கள். (சினிமா இல்லாமல் சென்னை இல்லை) சென்னையில் ஒரு நூற்றாண்டு சரித்திரம் அந்த மில்லுக்குச் சொந்தமானது.

அந்தத் தொழிலாளர்களின் ரத்தம், வியர்வை, மகிழ்ச்சி, கண்ணீர், மூச்சு, வாழ்வு எல்லாமே அங்கு இருக்கிறது. காலப் போக்கில் அங்கேயும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாகி, இந்தியாவின் முதல் தொழிற் சங்கம் உருவாகக் காரணமாக இருந்த இடம் அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு அவதாரம் எடுக்கலாம்.

பகுதி 9க்கு செல்ல…

Also Read: மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.