கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்டஓராண்டுக்குப் பிறகு மருத்துவத்துறையில் மீண்டும் ஓர் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், தனியார் மருத்துவமனை கைவிரித்த ஒரு சிகிச்சையை செய்து, ஒரு சிறுவனை காப்பாற்றியுள்ளனர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள். கோவை, ராமநாதபுரம் காவல்நிலைய பெண் போலீஸ் ஒருவரின் மகன் கிஷோர்.
Also Read: எப்படிச் செய்யப்படுகிறது மரு நீக்கும் காட்டரைசேஷன் சிகிச்சை? #Cauterization #Video
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கிஷோர் வீட்டில் இருந்த ஒரு விளையாட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்டு விளையாடியுள்ளார். `ஹேண்ட்ஸ் அப்’ என்று சொல்லிக் கொண்டு சுட்டதில், பிளாஸ்டிக் குண்டு எதிர்பாராத விதமாக கிஷோர் காதுக்குள் சென்று சிக்கியது.
வலியால் துடித்த சிறுவனை பெற்றோர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டனர்.
அங்கு குண்டை எடுக்க முடியாத சூழ்நிலையால், சிறுவனை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அவன் பெற்றோர். அப்போது, பணியில் இருந்த உதவி இருப்பிட மருத்துவர் மணிகண்டன் மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி நித்யா ஆகியோர் சிறுவனின் காதில் தண்ணீர் பீய்ச்சி அடித்து பிளாஸ்டிக் குண்டை வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் முடியாது என்று அனுப்பிய நிலையில் சாதித்துக் காட்டிய கோவை அரசு மருத்துவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவிக்க, மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.