செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படவுள்ள உபரி நீரை பார்க்க வந்த மக்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.
நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று மதியம் 12 மணிக்கு மேல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட உள்ளது.
இந்த தகவல் அந்த பகுதி மக்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவியது. இதையடுத்து குன்றத்தூர், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீரை காணவும் மதகில் இருந்து கலங்கல் எனும் உபரி நீர் திறக்கும்போது அதனை பார்த்து ரசிக்கவும் ஏராளமான பெண்கள், ஆண்கள், வாலிபர்கள் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் ஒன்று திரண்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த குன்றத்தூர் போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வெளியேற்றினார்கள் மேலும் அத்துமீறி நுழைந்தவர்களை லத்தியை காட்டி வெளியேற்றினார்கள். ஏரியின் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.