சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு ’மாறா’ என்று பெயரிட்டு சூர்யாவின் மீதான பேரன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளியையொட்டி வெளியான சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு பலரும் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டப் இப்படத்தை சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளுகிறார்கள்.
அவர்களே இப்படியென்றால், சூர்யா ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன? என்பதை நிரூபிக்கும் விதமாக பெங்களூரைச் சேர்ந்த சூர்யா ரசிகர் கார்த்தி என்பவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயரான ‘மாறா’ என்ற பெயரை வைத்து சூர்யா மீதான மாறாத அன்பை வெளிப்படுத்தியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயர் ‘நெடுமாறன் ராஜாங்கம்’. ஆனால், எல்லோரும் சுருக்கி கூப்பிடுவது ’மாறா’தான். கடந்த 25 வருடங்களில் சூர்யா எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் மாறா பெயரை மட்டும் வைக்க காரணம், படத்தை பார்க்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அத்தனை வயதினருக்கும் எனர்ஜி கொடுத்து சாதிக்கத்தூண்டியது மாறா கேரக்டர்.
நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த நெடுமாறன் ராஜாங்கம் ஏழை எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய குறைந்த செலவில் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியே சூரரைப் போற்று. அந்த முயற்சியில் பலமுறை தோல்வியுற்றாலும் சோர்ந்துவிடாத மாறா தனக்கான லட்சியத்தில் இறுதிவரை போராடி ஜெயிப்பார். தீபாவளிக்கு வெளியான படங்களில் சூரரைப் போற்றுவை அனைவரும் போற்றிக்கொண்டாட இதுவே, முக்கிய காரணம்.
• Our Karnataka @Suriya_offl Fans Club Member Karthi Has been Blessed With a Baby Boy & He Named His Son “#Maara” ♥️?
Welcome To The World Little One #Maara ? Wishing You All Happiness! @Suriya_offl | @rajsekarpandian | #SooraraiPottru #Suriya #SooraraiPottruOnPrime pic.twitter.com/3unl92oJ0w
— Suriya Fans Club™ (@SuriyaFansClub) November 21, 2020
இந்நிலையில், பெங்களூரு சூர்யா ரசிகர் கார்த்தி என்பவர் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு மாறா கேரக்டர் போலவே வாழ்வில் சாதிக்கவேண்டும் என்பதற்காக ‘மாறா’ என்று பெயரிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை, சூர்யா ரசிகர் மன்றத்தினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளனர்.