ஈஸ்வரன் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீஸரை உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. பொங்கல் வரவாக வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
முன்னதாக படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பு பிடிப்பதைப் போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை சினிமாக்களில் பயன்படுத்தித் துன்புறுத்தக்கூடாது எனக் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈஸ்வரன் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், படப்பிடிப்பின்போது சிம்பு கையில் இருப்பது பிளாஸ்டிக் பாம்பு எனவும், இனிமேல்தான் கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை படக்குழு வெளியிடவில்லை என்றும், அரசின் வழிகாட்டுதல்களின்படிதான் படப்பிடிப்பு நடப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி பாம்பு காட்சிகளைப் பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஈஸ்வரன் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீஸரை பகிர்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.