ஹைதராபாத் கல்லூரி மாணவியை பிறந்த நாள் கொண்டாட்டம் என்று அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹைதராபாத் குகட்பள்ளியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கல்லூரி மாணவி ஒருவர், மூன்று நண்பர்களால் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஜூபிலி ஹில்ஸில் வசிக்கும் அந்த இளம்பெண்ணை அக்டோபர் 5 ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர் எம்.ஜோசப் என்பவர் ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.
செகந்திராபாத்தில் படித்த அந்த இளம்பெண், ஜோசப்பின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கே.பி.எச்.பி மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்தார். அப்போது அங்கு ஜோசப் மற்றும் அவரது நண்பர்கள் பி நவீன் ரெட்டி மற்றும் ஆர் ராமு ஆகியோரும் இருந்தனர். அதன்பின் ஹோட்டலில் நடந்த விருந்தில், மயக்க மருந்துகளுடன் கூடிய கேக்கை அவருக்கு கொடுத்தபிறகு, மூவரும் அந்த பெண்ணை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என்று அந்த கும்பல் மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. சில நாட்களுக்குப் பின்னர் வலி மற்றும் சோர்வு காரணமாக அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண் தனது தாயிடம் ஹோட்டலில் நடந்ததைச் சொன்னார். அதன்பின் அப்பெண்ணின் பெற்றோர் குகட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குகட்பள்ளி போலீசார், அந்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்தனர். ஹோட்டல் நிர்வாகத்தின் மீதும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று அறியப்படுகிறது.