கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு, 10 ரூபாய் கட்டணத்தில் ’உழைப்பாளி மருத்துவமனை’யை நாளை மறுநாள் திறக்கவுள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகமே விழிபிதுங்கி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னையில் சித்த மருத்துவ முகாமில் கொரோனா சிகிச்சைக்காக வந்த 5000 பேருக்கு மேலான நோயாளிகளை உயிரிழப்பு ஏற்படாமல் குணப்படுத்தி வந்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு தற்போது, அந்த மையத்தில் இருந்து விலகி புதிதாக உழைப்பாளி மருத்துவமனையை துவக்கவுள்ளார்.
ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ஏற்கனவே ரஜினி பிறந்தநாளன்று கடந்த ஆண்டு ஏழைகளுக்காக பத்து ரூபாய்க்கு ‘உழைப்பாளி உணவகம்’ ஆரம்பித்து பாராட்டுக்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை மறுநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி சாலிகிராமத்தில் பத்து ரூபாய் கட்டணத்தில் ‘உழைப்பாளி மருத்துவமனையை ஆரம்பிக்கவுள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு சாதாரணமாக காய்ச்சல் என்று சென்றாலே குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கட்டணமாகப் பெறும் மருத்துவர்கள் மத்தியில், சித்த மருத்துவர் வீரபாபுவின் பத்து ரூபாய் கட்டணம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதில், சிறப்பு என்னவென்றால் சித்த மருத்துவம் மட்டும் பார்க்கப்படுவதில்லை. எம்.பி.பி.எஸ், எம்.எஸ் முடித்த அலோபதி மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார். சித்த மருத்துவம் மற்றும் அலோபதி என்று மக்கள் விருப்பத்தின்படி பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருப்பதால் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.