திருச்சியில் உள்ள பிரபலமான இரு நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த டிப்ளமேட்டிக் பார்சலில், 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தங்கக் கடத்தல் விவகாரத்தில், சொப்னா சுரேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த சில நகைக் கடைகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்பேரில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் திருச்சி வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், முகவர்கள் 8 பேரிடம் ஏற்கனவே விசாரணையில் ஈடுபட்டனர். அதில் கிடைத்த தகவலின்படி, திருச்சியில் உள்ள பிரபலமான இரு நகைக் கடைகள் சோதனை நடத்த சுங்கத்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது, என்.ஐ.ஏ.
அதன்படி திருச்சியில் உள்ள என்.எஸ்.பி சாலை மற்றும் சின்னக்கடை வீதியில் உள்ள இரு தங்க நகைக் கடைகளில், சுங்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இரண்டாக பிரிந்து, இரு கடைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். கோட்டை வாசலில் காரை நிறுத்திய அதிகாரிகள், அங்கிருந்து நகைக்கடைகள் இருக்கும் தெருக்களுக்குள் நடந்தே சென்றுள்ளனர். பொருட்களை வாங்கச் சென்ற மக்களோடு மக்களாக கலந்த அதிகாரிகள், அதிகாரிகளின் தோரணையின்றி சத்தமின்றி நகைக் கடைகளுக்குள் நுழைந்து அதிரடியை காண்பித்தனர்.
பரபரப்புக்கு மத்தியில் நடந்த இச்சோதனையின் பின்னணியில், கேரள தங்கக் கடத்தல் வழக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு, விற்பனை செய்யப்பட்டவற்றின் விவரம், இருப்பு உள்ள தங்கம் குறித்த தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.