ஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத் (35). இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரங்கநாத்திற்கும் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை அடுத்துள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ரங்கநாத் இளைய மகனான தனுஞ்செயாவின் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரை அங்கிருந்து ஒடஒட விரட்டி உருட்டு கட்டைகளாலும் பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் ரங்கநாத் உயிரிழந்தார். போத்த சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரங்கநாத் கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் கெலமங்கலம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் என்பவர் குந்து மாரனபள்ளியில் மரக்கடை நடத்தி வந்த நிலையில் அவரின் கடை சூறையாடப்பட்டது. இதனால் பதட்டத்தை குறைக்க அங்கு 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.