ஆரம்பத்தில் பாட்னாவில் உள்ள ராஜீவ் காந்தி காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் அவரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பம் நம்புகிறது என அவர்களுடைய குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மும்பை காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதை உணர்ந்த சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பீகாரில் வழக்கு பதிவு செய்துள்ளார் என்று விகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கோ அல்லது சுஷாந்தின் குடும்பத்திற்கோ வழக்குபதிவு செய்த அறிக்கையின் நகலை மும்பை போலீஸ் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால் வழக்கை வேறுவிதமாக கொண்டு சென்றிருக்கமுடியும். இதுதவிர அறிக்கை மராத்தி மொழியில் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் குடும்பத்தினருக்கு மொழி புரியவில்லை. மேலும் அவை ஒரு கவரில் வைத்து சீல் இடப்பட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மும்பை போலீஸார் அறிக்கைகளை பதிவுசெய்த விதத்தையும் சுஷாந்தின் குடும்பத்தினர் விரும்பவில்லை. மராத்தியில் எழுதப்பட்ட அறிக்கைகளில் சுஷாந்தின் சகோதரிகளை கையெழுத்திடும்படி வற்புறுத்தியதாகவும், அதில் என்ன எழுதியிருந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் விகாஸ் சிங் கூறியுள்ளார்.
சுஷாந்தைப் பற்றி ஊடங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் குறித்து சுஷாந்தின் குடும்பம் வருத்தப்பட்டதாகவும், ரியா அவர் வாழ்க்கையில் வந்தபிறகுதான் பிரச்னை ஏற்பட்டதாகவும் அவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் பற்றிய எந்த விவரமும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றும் விகாஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் சுஷாந்த் குடும்பத்தினரின்பேரில் எந்த போலி அறிக்கையையும் ஊடகங்களில் வெளியிடவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.