இயற்கையின் படைப்பில் மிக அழகிய ஒன்று மனித உடல். பல்வேறு கண்ணுக்குத் தெரியாத மூலக்கூறுகள், ரத்த அணுக்கள் முதல் முக்கிய உறுப்புகளான இதயம், மூளை, பெரிய எலும்புகள் வரை வித்தியாசமான அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மனித உடல். நமக்குத் தெரியாத நம் உடலிலேயே இருக்கும் அதிசயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

பிளேடுகளையே அழிக்கும் வல்லமை கொண்டது நமது வயிற்றில் இருக்கும் அமிலங்கள்;

 இதை நாம் யாரும் சோதித்துப் பார்க்க விரும்ப மாட்டோம். ஆனால் உண்மை என்னவென்றால் நம் வயிற்றில் இருக்கும் அமிலங்களுக்கு சக்தி அதிகம். நமது ரத்தத்தின் pH அளவு 7.4. இதில் காரத்தன்மை உள்ளது. இதே வயிற்றில் இருக்கும் அமிலம் 1 அல்லது 2 pH அளவுக்குள்தான் இருக்கும். இது மற்ற உறுப்புகளை பாதிக்காமல் இருப்பதுதான் அதிசயம்.

வாழ்நாளில் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை இரண்டு நீச்சல் குளம் நிறைய நிரப்பலாம்;

நம் வாழ்நாளில் 25,000 குவாட் உமிழ்நீர் வாயில் சுரக்கிறது. வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவு உண்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. பல் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றுகள், பல்சிதைவு போன்றவற்றைத் தடுக்கிறது. போதுமான உமிழ்நீர் சுரக்காவிட்டால் கடுமையான சுகாதார சீர்கேடுகளை சந்திக்க நேரிடும்.

image

மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் மட்டுமே இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் இருக்கும். உடல் சிறியதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குறைந்தது 90 முதல் 95 எலும்புகள் அதிகமாக இருக்கும். வளரும்போது இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே எலும்பாக மாறி கடைசியில் 206 எலும்புகள் இருக்கும். எலும்புகள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதற்கு ஒரு உதாரணம், குழந்தையின் மென்மையான தலை அனைவருக்கும் தெரியும். முதலில் 8 பகுதிகளாக இருக்கும் மண்டை ஓடு நாளடைவில் நான்காக சேர்ந்துவிடுகின்றன.

உடலுக்கு வயது ஆக ஆக இரண்டு கைகளையும் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கும்;

 இது ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 வயதிற்குட்பட்டவர்கள் வலது கையை அதிகம் பயன்படுத்தி சிறப்பான வேலைகளை செய்கிறார்கள். 50 வயதிற்குட்பட்டவர்கள் இடதுகையையும் சில வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் எல்லா வேலைகளுக்கும் இரண்டு கைகளையும் சேர்த்துதான் பயன்படுத்துகிறார்கள். இவர்களால் எந்த பணியையும் சிறப்பாக செய்யமுடியும்.

image

சில இரட்டையர்களுக்கு உடல் வாசனை ஒரே மாதிரியாக இருக்கும்;

ஒவ்வொருவருக்கும் உடல் வாசனை மாறுபடும். ஆனால் சில இரட்டையர்களுக்கு உடல் வாசனை ஒரே மாதிரியாக இருக்கும். நாம் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தும்போது வரும் வாசனையைத் தவிர்த்து, இயற்கையாகவே உடலில் இருந்துவரும் வாசனையை ஒப்பிடும்போது சில இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான வாசனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எல்லா இரட்டையர்களிடமும் இல்லை. மரபணுதான் உடலின் வாசனையை முடிவுசெய்வதை அறிவியல் ஆராய்ச்சிகள் விளக்குகின்றன. சில இரட்டையர்கள் துல்லியமாக ஒரே டி.என்.ஏவைக் கொண்டிருப்பதால் இயல்பாகவே ஒரே வாசனை வருகிறது.

பயப்படும்போது உடலின் வலிமை அதிகமாக இருக்கும்;

இயல்பான நேரங்களைவிட பயப்படும்போது உடலின் வலிமை அதிகமாக இருக்கும். காருக்கு அடியில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்ற அதன் அம்மா காரையே தூக்கிய செய்திகளைப் படித்திருக்கிறோம். இது ஆச்சர்யமாக இருந்தாலும் சிலநேரம் உண்மைதான். சாதாரணமாக ஒரு கனமான பொருளைத் தூக்க முயற்சிக்கும்போது நம் உடலின் 65% வலிமையை நாம் பயன்படுத்துகிறோம். பயிற்சி பெற்றவர்கள் 80% வரை முயற்சிக்கலாம். ஆனால் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் வலிக்கான பதிலை குறைக்கிறது. இது உங்களை மேலும் தூக்க அனுமதிக்கிறது. ஒரு காரைத் தூக்குவது சாத்தியமில்லை என்றாலும், வழக்கத்தைவிட 12% அதிகமாக தூக்கலாம்.

60 வயதைத் தொடும்போது நமது நாவின் பாதி சுவைமொட்டுகள் போய்விடும்;

 ஒருகாலத்தில் மிகவும் விரும்பி சாப்பிட்ட உணவுகள் வித்தியாசமாக சுவைக்கத் தொடங்கும். 40 வயதிற்குட்பட்ட பெண்கள் சுவை மொட்டுகளை இழக்கத் தொடங்குவது இயல்பு என சில ஆய்வுகள் கூறுகின்றது. 50களில் இன்னும் குறையும். 60 வயதைத் தொடும்போது பாதியாகிவிடும். இனிப்பு மற்றும் உப்பு சுவைதிறன் மற்றும் வாசனை திறன் குறையும்.

image

மூளையில் ஒரு பல்பை எரியவைக்கும் அளவிற்கு மின்சக்தி இருக்கிறது;

 அதிக சக்திவாய்ந்த இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் மூளை அதற்கு சற்றும் குறைவானது இல்லை. மூளையில் இருக்கும் நியூரான்கள் ஒரு பல்பை இயக்க போதுமான மின்சாரத்தை உருவாக்குகின்றன என்று ரீடர்ஸ் டைஜஸ்ட் தெரிவித்துள்ளது. அதற்காக இந்த அளவு ஆற்றலை உருவாக்கும் மூளைக்குள் உள்ள 100 பில்லியன் செல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல், உடலில் இருந்து மூளைக்கு பயணிக்கும் தகவல்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மணிக்கு 150 மைல் வேகத்தில் செல்கின்றன.

இன்ச் சருமத்தில் 32 மில்லியன்களுக்கும் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கின்றன;

ஒரு இன்ச் சருமத்தில் 32 மில்லியன்களுக்கும் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கின்றன. எவ்வளவுமுறை குளித்தாலும் இந்த பாக்டீரியாக்கள் உடலில் இருக்கத்தான் செய்யும். இவற்றில் பெரும்பாலானவை நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள். தோலில் முகப்பரு உருவாக்கும் மற்றும் ஸ்டெஃபிளோகாக்கஸ் என்ற பொதுவான இரண்டு பாக்டீரியாக்களை நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். தோலில் புண்கள் மற்றும் பருக்களை ஏற்படுத்தினாலும் இவை பெரும்பாலும் தீங்கு விளைவிப்பதில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.