தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக-பாஜக இடையே போட்டி என்று துரைசாமி கூறியிருக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2 வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறி இருக்கலாம். கடந்த 2011ல் எங்கள் அணியில் இணைந்து தேமுதிக எதிர்கட்சியானது.
அதைப் போன்று தற்போது எங்கள் அணியில் இணைந்து பா.ஜ.கவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. அதற்காக மறைமுகமாகத் தெரிவித்து இருக்கலாம். திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவார்கள் என்று மு.க. அழகிரி தெரிவித்து வருகிறார். திமுகவில் நடப்பது குடும்ப அரசியல். மு.க.ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. கனிமொழி மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
ஆகையால்தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் முன்னிலை நிறுத்தி வருகிறார். ஆகையால் தான் வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றோர் திமுகவில் இருந்து வெளியேறி உள்ளனர். திமுகவில் மனக்குமுறல் உள்ளது என்பது எங்களைவிட மு.க.அழகிரிக்குதான் நன்றாக தெரியும். எனவே அவர் கூறிய கருத்து திமுகவில் பிரதிபலிக்கும் சூழ்நிலை உள்ளது” என்றார்.