மும்பையில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், பொதுமுடக்கம் காரணமாக 115 நாள்களாக நடந்தே வந்து சென்னையை அடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூரைச் சேர்ந்தவர் பரந்தாமன்(47). இவர் மும்பையில் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மும்பையிலிருந்து சென்னை வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தால் ரயில், பேருந்து சேவைகள் இல்லாமல் போனதால், வேலையும் மருந்தும் இன்றி பரந்தாமன் தவித்துள்ளார். வேறு வழியின்றி கால்நடையாக மும்பையில் இருந்து புறப்பட்ட பரந்தாமன், 115 நாட்களாக 1,306 கிலோ மீட்டர் தூரம் கடந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை அடைந்துள்ளார்.
அங்கு ஆதரவின்றி தவித்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பார்த்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் பரந்தாமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.