உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சமாகவும் வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.28 கோடியாகவும் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய பெரிய நாடுகள் கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள கடுமையாகப் போராடி வருகின்றனர்.
அதே நேரம் சீனா, தைவான், தென் கொரியா, மங்கோலிய, நியூசிலாந்து, வியட்நாம், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திவிட்டன. ஆனால், இவற்றில் நியூசிலாந்துதான் கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்டு, தொற்று பரவலை முழுமையாகத் தடுத்துள்ளதாக உலகளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தற்போது அங்கு 23 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்தாலும் கடந்த 100 நாள்களாக அங்கு எந்தச் சமூகப் பரவலும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Also Read: `கொரோனா இருப்பதைப்போல செயல்படுங்கள்!’ -நியூசிலாந்து பிரதமரின் வைரஸ் தடுப்பு அட்வைஸ்
நியூசிலாந்தில் பிப்ரவரி மாத இறுதியில் முதன்முறையாக கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு தற்போதுவரை 1,219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. ஆரம்பம் முதலே கடுமையான ஊரடங்கு, எல்லைகள் மூடல், தீவிர பரிசோதனைகள், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியது, விரைவான முடிவுகள், மக்களிடம் தெளிவான புரிதல் ஆகியவையே நியூசிலாந்து இந்தச் சாதனையைப் படைக்கக் காரணமாக இருந்துள்ளது.
இது பற்றிப் பேசியுள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை இயக்குநர் ஆஷ்லே, ‘நியூசிலாந்து சமூக பரவல் இல்லாமல் 100 நாள்களைக் கடந்துவிட்டது. இது ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது, இருந்தும் இந்த நல்ல விஷயத்தை முழு மனநிறைவுடன் கொண்டாட முடியவில்லை. தற்போது இங்கு 23 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருமே நியூசிலாந்து எல்லையைச் சட்டவிரோதமாகக் கடந்தபோது பிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். கொரோனா வைரஸ் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேகமாகப் பரவியது என்பதை நாங்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்பாகப் பார்த்தோம். வருங்காலத்தில் மீண்டும் கொரோனா பரவல் வெடிக்காமல் அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read: `ஜூன் 22 டார்கெட்; முன்னரே ஜீரோவைத் தொட்ட எண்ணிக்கை!’ – கொரோனா தடுப்பில் அசத்திய நியூசிலாந்து