நடிகர் சூர்யா நடித்துள்ள “சூரரைப் போற்று” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “காட்டுப் புயலே” எனத் தொடங்கும் பாடல் ஜூலை 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு 1 நிமிட வீடியோவாக வெளியிடப்பட்டும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். “ஏர் டெக்கான்” உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
அதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமானநிலையத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் சூர்யா, “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் உள்படப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், அகரம் சார்பில் 100 பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வந்தன. முன்னதாக இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திரைத்துறை முற்றிலுமாக முடங்கியது. ஆனால் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மேலும் தணிக்கை முடிந்து “சூரரைப் போற்று” படத்துக்கு “யூ” சான்றிதழ் கிடைத்துவிட்டது. இப்படத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியது. இப்போது மூன்றாவதாக ஒரு பாடல் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காட்டுப் புயலே” எனத் தொடங்கும் பாடல் 1 நிமிட வீடியோவுடன் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக் குழுவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷூம் தெரிவித்துள்ளனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.