இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தன்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து கூறியுள்ளார்
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை டிஏஆர் மோஷன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘800’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனை குறிப்பிடும் விதமாகவே படத்திற்கு ‘800’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், 2021-ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும், “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தன்னை முரளிதரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
அதில் “நான் கிரிக்கெட் போட்டியை பார்க்கவேமாட்டேன், எனக்கு ஏனோ அந்த விளையாட்டு போர் அடித்தது. அதனால் என் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பதில்லை. நான் இதனை முரளிதரனிடம் தெரிவித்தேன். அவர் உடனடியாக என்னுடைய கதாப்பாத்திரத்தில் நடிக்க நீங்கள் சரியானவர்தான் என கூறினார்” என்றார் விஜய் சேதுபதி.
மேலும் இந்த படம் தொடர்பான சில புதிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, முரளிதரன் கதாபாத்திரத்திற்காக விஜய் சேதுபதியின் உடல் எடையை குறைக்க சிறப்பு பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், தற்போது இருக்கும் நிலையில் தன்னுடைய உடலை மாற்றுவது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக உள்ளதென்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.