பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி 8-வது இடத்தை பிடித்துள்ளார்
இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்தன. இந்த நேரத்தில் அம்பானி தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17% பங்குகளை விற்றார்.
இந்தப் பங்குகளை ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானி சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 64.5 பில்லியன் டாலர் ஆனது. இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனை அடுத்து அந்த நேரத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார்.
இந்த சாதனை மூலம் கடன் இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியது. வெறும் 58 நாட்களில் இந்த சாதனையை செய்து முடித்தார் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு பங்குதாரர்களுக்கு இடையே பேசிய முகேஷ் அம்பானி. 2021 மார்ச் மாதத்திற்குள் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக இது இருக்கும் என பேசினார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே தன்னுடைய வார்த்தைகளை அம்பானி நிறைவேற்றி சாதனை படைத்தார். தற்போது வெற்றிவாகை சூடும் அம்பானி மற்றொரு சாதனையையும் செய்துள்ளார். உலகின் தலை சிறந்த முதலீட்டாளரும் மில்லியனுருமான வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி.
புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரகள் பட்டியலின்படி, அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8 வது இடத்திலும், 67.8 பில்லியன் டாலருடன் வாரன் பஃபெட் 9தாவது இடத்திலும் உள்ளனர். கடந்த மாதம் எட்டாவது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் 2.9 பில்லியன் டாலரை அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளதால் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது ஆசிய அளவில் முதலிடத்திலும், உலகளவில் 8வது பணக்காரராகவும் அம்பானி உள்ளார்.