டிக்டாக் செயலிக்கு பதிலாக டிக்டாக் ப்ரோ என்ற செயலியை பதிவேற்றுமாறு ஆன்லைன் மோசடி கும்பல் வலை விரித்துள்ளது.
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை டிக்டாக் செயலியை பயன்படுத்தி அதன்மூலம் பிரபலம் அடைந்தவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அத்துடன் டிக்டாக் செயலிக்கு பதிலாக புதிய செயலியை தேடியும், டிக்டாக் செயலியை வேறு எப்படியாவது பதிவிறக்கம் செய்ய முடியுமா ? என்ற வகையிலும் டிக்டாக் பிரியர்கள் ஆன்லைனில் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் இந்த நிலையை உணர்ந்து கொண்ட ஆன்லைன் மோசடி கும்பல், தங்கள் தில்லுமுல்லு வேலையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக டிக்டாக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடி, அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்தியை அனுப்புகின்றனர். அதில் டிக்டாக் செயலிக்கு பதிலாக டிக்டாக் ப்ரோ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இருக்கிறது. இதை பதிவிறக்கம் செய்துகொண்டு மீண்டும் வீடியோக்களை உருவாக்குங்கள் அல்லது பாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மோசடி கும்பலின் வலை விரிப்பை அறியாத அப்பாவி டிக்டாக் பயன்பாட்டாளர்கள் பலரும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் மொபைலில் கேமரா மற்றும் மைக் உள்ளிட்டவற்றின் அனுமதியை கொடுத்துவிடுகின்றனர். அதன்பின்னர் டிக்டாக் செயலியின் லோகோ ஒன்று அவர்களின் மொபைலில் வருகிறது. ஆனால் அந்த லோகோவை கிளிக் செய்தால் அது எந்த விதத்திலும் வேலை செய்வதில்லை. ஆனால் அவர்களின் மொபைல் தகவல்கள் அதன்பின்னர் திருடப்படுகின்றன.
இவ்வாறு மெசெஜ் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தியை பெற்ற பலரும் அதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, காவல்துறையை குறிப்பிட்டு, புகார் அளித்துள்ளனர். டிக்டாக் ப்ரோ என்ற செயலி உண்மையில் கூகுள் ப்ளே ஸ்டோரிலோ அல்லது வேறு இந்த இணையதளத்திலோ இல்லை. அது முற்றிலும் மோசடி கும்பலின் வலை விரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.