இந்தியாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை கண்டுபிடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதிலும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ணா எல்லா குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆந்திராவின் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் உள்ளவர்தான் டாக்டர் கிருஷ்ணா எல்லா. திருத்தணி நெமிலி கிராமத்தில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச்சென்ற கிருஷ்ணா எல்லா, விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றபிறகு தெற்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர்.
தாய்நாட்டுக்கு சேவை செய்ய வருமாறு தாய் அழைத்ததின் பேரில் இந்தியா திரும்பிய கிருஷ்ணா எல்லா, 1996 ல் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இணைந்தார். தடுப்பு மருந்து தயாரிப்பில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்துவதன் மூலம் மக்களை தொற்று நோய்களிடம் இருந்து காக்க முடியும் என்று நம்பும் இவரின் தலைமையில் பல நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கி சர்வதேச நிறுவனமாக பெயர் பெற்றது பாரத் பயோடெக்.
ஜிகா வைரசுக்கு உலக அளவில் பல நிறுவனங்கள் ஒரு மருந்துக்கு 30 முதல் 40 டாலர் வரை விலை நிர்ணயித்த நிலையில், இவர் அந்த மருந்தை 1 டாலருக்கு விற்பனைக்கு கொண்டுவந்து சாதனை படைத்தார். இப்போது உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரானாவிற்கும் கிருஷ்ணா மருந்து கண்டுபிடித்துள்ளார்.
தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் உள்ளது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான இந்த தடுப்பு மருந்து வரும் 7 ஆம் தேதி முதல் மனிதர்கள் மீது பரிசோதனை முயற்சியாக செலுத்தப்பட உள்ளது. அதில் திருப்திகரமான முடிவுகள் வந்த பின்னர் உரிய அனுமதி வழங்கப்படும்.
உலக அளவில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த நிறுவனங்கள் எண்ணிக்கை 140. அதில், மனிதர்களுக்கு பரிசோதிக்க ஏற்று கொள்ளபட்டவை வெறும் 16 தான், அவற்றில் ஒன்றாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் மருந்தும் இடம் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் டாக்டர் கிருஷ்ணா எல்லா என்ற தமிழரின் பங்களிப்பு தமிழர்களுக்கு பெருமையே.