இறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக தன்னுடைய வேலையாட்கள் அனைவருக்கும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சம்பளம் வழங்கியுள்ளது காவல் துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
ஆனாலும் மும்பை மாநகர பாந்த்ரா போலீஸார் சுஷாந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் தன்னுடைய வேலையாட்கள் அனைவருக்கும் இறப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு சம்பளத்தை வழங்கியுள்ளார். மேலும் தன்னுடைய வேலையாட்கள் அனைவரிடமும் இனிமேல் என்னால் சம்பளம் தர முடியாது, அதற்கான சூழலும் இல்லை என தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக தன்னுடைய முன்னாள் மேலாளர் திஷா சலியனுடனும் சஷாந்த் பேசியதாக தெரிகிறது. அப்போது வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ரூ.14 கோடி சம்பளம் வாங்கித் தருவதாக திஷா, சுஷாந்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக திஷாவும் தற்கொலை செய்துக்கொண்டார். திஷாவின் திடீர் மறைவு சுஷாந்தை கடுமையாக பாதித்ததாக, வேலையாட்கள் கூறியுள்ளனர். இதனால் இறப்பதற்கு சில நாள்கள் முன்பு வரை சுஷாந்த் பெரும்பாலும் தனிமையிலேயே இருந்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.