‘ஆளப்போறான் தமிழன்’ பாடலைப் பாடிய சத்ய பிரகாஷ், இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வெளியான “ஆளப்போறான் தமிழன்” பாடல் மூலம் அதிகம் அறியப்பட்டவர் சத்ய பிரகாஷ். அதேபோல் இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் “நல்லை அல்லை” பாடினார். மேலும் சிம்புவின் அச்சம் என்பது மடமையடாவில் “ராசாலி”, எனை நோக்கி பாயும் தோட்டாவில் “நான் பிழைப்பேனோ” எனப் பாடல்கள் மூலம் பேசப்பட்டவர் சத்ய பிரகாஷ். இவர் இப்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இளம் தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப, புதிய ஆல்பம் ஒன்றை முதன்முதலாக இசையமைத்துப் பாடியுள்ளார். “வாரேன் ஓடி வாரேன்” எனத் தொடங்கும் இந்தப் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதன் வரிகள் அடங்கிய “லிரிக்கல் வீடியோ” இன்று மாலை ஆறு மணிக்கு சத்ய ப்ரகாஷின் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதனைப் பிரபல இசையமைப்பாளர் டி.இம்மான் வெளியிடுகிறார். இப்பாடலை அகமது ஷியாம் எழுதியுள்ளார்.
தன் காதலியைத் தேடிப் பயணிக்கும் ஒரு காதலனின் எண்ணத்தையும் காதலையும் பிரதிபலிக்கும் விதமாக இந்த “வாரேன் ஓடி வாரேன்” பாடல் அமைக்கப்பட்டுள்ளது.