இயக்குநர் பரத் பாலா ஊரடங்கு அனுபவங்கள் குறித்து எடுத்துள்ள ‘மீண்டும் எழுவோம்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட உள்ளார்.
நடிகர் தனுஷை வைத்து ‘மரியான்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பரத் பாலா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையுடன் இந்தப் படம் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் இவர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் புதிய ஒரு புராஜெட்டில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குநர் பரத் பாலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இது நமது வரலாற்றில் ஒரு அசாதாரண நேரம். இது வருங்கால சந்ததியினருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டில்1.3 பில்லியன் மக்கள் எவ்வாறு முற்றிலுமாக நவீன யுகத்தில் முடங்கினர் என்பதை வருங்கால தலைமுறைப் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “உலக வரலாற்றின் இந்த நீரோட்டத்தை ஆவணப்படுத்த வேண்டி 14 மாநிலங்களில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தைப் படக்குழுவினர் படம்பிடித்துள்ளனர். காஷ்மீர் முதல் கேரளா வரை.. அதேபோல் குஜராத் முதல் அஸ்ஸாம் வரை என ஒட்டுமொத்த நாட்டின் நிலையை இந்தப் படம் உள்ளடக்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில் பரத் பாலா பொது முடக்கத்தின் போது இந்த ஆவணப்படத்தை எடுக்க மகத்தான ஆதரவை வழங்கிய மத்திய அரசு, உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் நாட்டில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 117 நபர்களின் உதவியுடன் ஊரடங்கின் போது எடுக்கப்பட்டுள்ளது என்றும் வருகின்ற 6 ஆம் தேதி இதனை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.