‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனவாதம் பற்றிப் பேசியிருக்கிறார். “எனக்கு 14 வயதாக இருந்தபோது எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம், அவரது தாயார் அவரை ஒருபோதும் தேநீர் குடிக்க விடமாட்டார், ஏனென்றால் தேநீர் குடிப்பதால் தோலின் நிறம் கருமையாகும் என்ற வித்தியாசமான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. மேலும் அவர் ஒரு முறை தேநீர் கேட்டபோது அவரது தாய் அவரிடம் நீ தேநீர் அருந்தினால், அவளைப் போல கறுப்பாகிவிடுவாய்’ என்று கூறியிருக்கிறார். அவர் ஒரு மகாராஷ்டிர பையன், நான் மாநிறம் கொண்ட மலையாளப் பெண். இது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது, ஏனென்றால் யாரோ ஒருவர் எனது தோல் நிறத்தைப் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டது இதுவே முதல் முறை. நமது சொந்த சமுதாயத்தில் இவ்வளவு இனவாதம் உள்ளது. உலகளாவிய இனவெறி பற்றி நாம் பேசும்போது, நம்மைச் சுற்றிலும், நம் வீடுகளிலும், நம் நண்பர் வட்டங்களிலும், நமது சமுதாயத்திலும் என்ன நடக்கிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் வெளிப்படையான மற்றும் நுட்பமான இனவெறி மற்றும் நிறவாதத்தை முறியடிப்பதில் நமது பங்கைச் செய்ய வேண்டும். அன்றாட வாழ்க்கையில் நம்மை அழகாக மாற்றுவது கனிவான குணம் மட்டும்தான். சருமத்தின் நிறம் அல்ல” என்று பதிவிட்டிருக்கிறார்.
Also Read: “இளையராஜா கவாஸ்கர்… ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர்… ஏன் சொல்றேன்னா?” – மிஷ்கின்
சமந்தாவின் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட் வைரலானதைத் தொடர்ந்து, அவரது கல்லூரி மார்க் ஷீட்டும் சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது சமந்தா தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் அவர் விதைகளை விதைப்பதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகப் பதிவிட்டிருக்கிறார்.
ஜிம் வொர்க் அவுட்டைத் தாண்டி யோகாவில் ரகுல் ப்ரீத்சிங்கிற்கு அதிக ஆர்வம். அவர் சொல்லி 108 சூர்ய நமஸ்காரத்தைச் செய்திருக்கிறார், நடிகை ஹூமா குரேஷி. தவிர, ‘Its never too late’ என்ற உரையாடலைத் தொடங்க இருக்கிறார். “நம் அனைவருக்கும் கடினமான காலம் இது. எதிர்காலம் குறித்த கவலை, விரக்தி, பயம், இரவில் தூங்க முடியாமல் போவது ஆகிய உணர்ச்சிகளை எல்லாவற்றையும் நான் உணர்கிறேன். இவைப் பற்றி ‘Its never too late’ என்ற ஷோவில் உங்களோடு பேச இருக்கிறேன். குறிப்பாக இரவு நேரத்தில். ஏனென்றால் நான் ஒரு ஆந்தை” என்று சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்டதோடு அதற்கான டீசரையும் பகிர்ந்துள்ளார்.
நேற்று சமீரா தனது மேக்கப் வீடியோ நாளை பதிவிடுகிறேன் என்று கூறியிருந்தார். அதற்கேற்றவாறு அவரிடமிருந்து வெறும் வீடியோ மட்டுமல்லாமல் மேக்கப் டிப்ஸும் வந்திருக்கிறது. அதற்கு ‘Bun to Fun Make up’ எனப் பெயர் வைத்திருக்கிறார். ஆண்ட்ரியா பிரவுனி செய்யத் தேவையான பொருள்கள், செய்முறையைப் பதிவிட்டது போல மேக்கப்பிற்குத் தேவையான பொருள்கள், செய்முறை ஆகிவற்றைப் பகிர்ந்துள்ளார், சமீரா.
தன்னுடைய அம்மா அப்பாவின் திருமண நாளுக்கு வாழ்த்து சொன்ன இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன், தான் சிறு வயதில் அவர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘குறும்புத்தனமான குழந்தையாக இருப்பதற்கு மன்னியுங்கள்’ என்றும் கூறியிருக்கிறார்.
இந்த லாக் டெளன் காலத்தில் மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாகவே வருகிறது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், நடிகர் பிரசன்னா. “இந்த லாக் டெளனில் #TNEB கொள்ளையடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என்று ட்வீட் தட்டியவுடன் பலர் தங்கள் வீடுகளில் எக்கச்சத்துக்கும் எகிறியிருக்கும் கரன்ட் பில் ரசீதை போட்டோ எடுத்து கமென்ட் செய்கின்றனர்.
Also Read: தலைகீழே பல காதல், பல கண்ணாடி, பல கோட்டை… ஒரே ஒரு சிவந்த வானம்! டிகோடிங் மணிரத்னம் #HBDMANIRATNAM