இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இவற்றை திறப்பது குறித்து அரசுகள் இன்னும் தெளிவாக முடிவு எடுக்காத நிலையில் பல பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கெடுக்க முடியாமல் போனதால் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வலஞ்சேரி எனும் பகுதியைச் சேர்ந்தவர் இந்த மாணவி. இவர் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை காலை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாணவியின் வீட்டில் டி.வி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த மாணவி மதியம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள காலியான இடத்தில் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். இந்த மாணவி படிப்பில் சிறந்து விளங்கும் மாணவராக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாணவியின் தந்தை இதுதொடர்பாகப் பேசுகையில், “எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி உள்ளது. அது பழுதடைந்துள்ளது. அதைச் சரி செய்து தர வேண்டும் என என்னிடம் கேட்டாள். ஆனால், என்னால் அதைச் சரி செய்து கொடுக்க முடியவில்லை. ஸ்மார்ட்ஃபோனையும் என்னால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. அவள் ஏன் இப்படி செய்தாள் என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்களின் வீட்டுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட மாற்று வழிகளைக் குறித்து யோசிக்கலாம் என்றுகூட நான் கூறியிருந்தேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மாணவியின் அப்பா கூலி வேலை செய்து வருவதாகவும் ஊரடங்கால் வருமானம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றொருக்குச் சில நாள்களுக்கு முன்பு இன்னொரு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read: கொரோனா எதிரொலி: தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள், அரசுப்பள்ளிகளின் நிலை என்ன?
சம்பவம் தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படும் குடும்பம் இது. இதனால், படிக்க முடியாத நிலை ஏற்படும் என மாணவி கவலையில் இருந்துள்ளார். மேலும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க முடியாமல் மிகவும் மன உளைச்சலிலும் இருந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கவலைக்குரிய சம்பவம் தொடர்பாக கேரளாவின் கல்வி அமைச்சர், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாகவும் தெரிகிறது.
ஊரடங்கு காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜூன் 1-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அம்மாநிலத்தில் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் டி.வி, மொபைல் மற்றும் இணையம் போன்ற வசதிகள் இல்லாத சூழலில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. மிகவும் கஷ்டப்படும் பின்னணி உள்ள குடும்பங்களிலிருந்து இம்மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கு உரிய வசதிகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வழியாக பாடங்களை அரசு தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, ஆன்லைன் கல்வி தேவையா என்பது குறித்து விவாதங்கள் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு மாணவியின் தற்கொலைக்கு அந்த ஆன்லைன் கல்வியே காரணமாக அமைந்துள்ளது கல்வியாளர்களிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: `ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாமா கூடாதா?!’ – ஒரே நாளில் முடிவை மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்