சொட்டு நீர்ப் பாசனம் மூலம் 12 டன் தர்பூசணிகளை பயிர் செய்த விவசாயியைத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்துப் பாராட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலசேகரன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். அவர் பயிர் செய்யும் பகுதி வறட்சியான பகுதி என்பதால், தர்பூசணி சாகுபடி செய்யத் தேவையான தண்ணீரைத் தினமும் ஆட்களைக் கொண்டு குடங்கள் மூலம் ஒவ்வொரு செடிக்கும் ஊற்றிப் பயிர் செய்து வந்தார்.
இப்படிப் பயிர் செய்வதால் கால விரயம் மற்றும் பண விரயம் அதிகமானதை உணர்ந்த குலசேகரன், இதற்கான மாற்று வழி தேடி சீர்காழி அரசு தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை நாடியுள்ளார். அவரைச் சந்தித்துப் பேசிய அதிகாரிகள் மானியத்துடன் கிடைக்கும் சொட்டு நீர்ப் பாசன அமைப்பு குறித்தும், குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதனைக் கேட்ட குலசேகரன் உடனடியாக தனது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவ விண்ணப்பித்தார். அதன்படி கடந்த மார்ச் மாதம் தோட்டக்கலைத் துறை மூலம் அவரது நிலத்தில் சொட்டுநீர்ப் பாசன அமைப்பு நிறுவப்பட்டது. குலசேகரனின் புது முயற்சியைப் பார்த்த அப்பகுதி மக்கள் இத்தனை ஆண்டுக்காலம் செய்யாத சாகுபடியை இந்த முறை செய்யப் போகிறாயா?? என ஏளனமாகப் பேசியுள்ளனர். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத குலசேகரன் தர்பூசணி சாகுபடியைத் துவங்கினார். மூன்று மாத காலப் பயிரான தர்பூசணி 65 நாட்களிலேயே அறுவடை பருவத்தை எட்டி நல்ல மகசூலையும் கொடுத்துள்ளது.
இது குறித்து குலசேகரன் கூறும் போது “ இதுவரை ஏக்கருக்கு 6 டன் தர்பூசணி மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் இந்தாண்டு 12 டன் மகசூல் கிடைத்துள்ளது. ஒரு பழம் 15 கிலோ வரை எடை இருந்தது. சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் சிக்கனம், உரங்கள் இடும் நேரம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை என அனைத்து தடைகளையும் சமாளிக்க முடிந்தது” என்றார்.
இதனையடுத்து குலசேகரனை நேரில் சந்தித்த தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பொன்னி மற்றும் செல்வராஜ், குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.