கொரோனா வைரசால் முடக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துகள் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றுக்கு படிப்படியாக அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். படிப்படியாக விமானச் சேவை முழு அளவுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், 25-ம் தேதி விமானச் சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருக்குமாறும் விமான நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடர்பாகப் பேட்டியளித்த ஹர்தீப் சிங் பூரி “சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்படுவதற்கான தேதியை என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் தொடரும். நிலைமையைப் பொறுத்து முன் கூட்டிய போக்குவரத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.