சென்னையில் மட்டும் முகக் கவசம் அணியாமல் வெளியே திரிந்தவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ. 10 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் நேற்றுவரை மொத்தம் 94 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ‘மாஸ்க்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதாவது முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து தலா ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. வாகன தணிக்கையில் முக கவசம் அணியாத 2130 பேர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 500 வீதம் ஒரே நாளில் ரூ. 10 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.