தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சி ஒன்றுபோலவே இருப்பதாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் சக வீரர்களோடு உரையாடி மகிழ்கின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உரையாடும்போது தோனி பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. அதற்கு “சின்ன தல” சுரேஷ் ரெய்னா விதிவிலக்கல்ல.
ஸ்போர்ட்ஸ் ஸ்கிரீன் என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா “தோனியைப் போலவே கேப்டன்சியில் ரோகித்தும் செயல்படுகிறார். தோனி எப்படி வீரர்களை உற்சாகப்படுத்துவாரோ, ஊக்கப்படுத்துவாரோ அதைப் போலவே ரோகித்தும் செயல்படுகிறார். இதுபோன்ற ஊக்கப்படுத்தலே வீரர்களைச் சிறப்பாக விளையாடத் தூண்டும். இந்த விஷயம்தான் ரோகித்திடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார்.
இதுகுறித்து மேலும் தொடர்ந்த அவர் ” புனே அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மேற்கொண்ட சில நகர்வுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆட்டத்தின் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ரோகித் எடுத்த முக்கிய முடிவுகள் அற்புதமானவை. இதனால்தான் அவர் 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை” என்றார்.