கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியப் பணிகள் தவிர இதரப் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. சுற்றுலா வருவாயைச் சார்ந்துள்ள நீலகிரியில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெற முடியாத சூழல் நிலவுகிறது.
நீலகிரியில் உள்ள அனைத்துப் பூங்காக்களும் மூடப்பட்டிருந்தாலும் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆசியாவின் சிறப்பு வாய்ந்த ரோஜா பூங்காக்களில் ஒன்றான ஊட்டியில் உள்ள நூற்றாண்டு நினைவு ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்து 202 ராகங்களில் 40 ஆயிரம் ரோஜா செடிகளும் பூத்து மொத்தப் பூங்காவும் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் ஊட்டி அரசு ரோஜா பூங்கா தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பூங்காவில் 1500 மலர்த்தொட்டிகளில் பூத்துள்ள வண்ண மலர்களைக்கொண்டு பிரமாண்ட ரோஜா மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 8, 9, 10-ந்தேதிகளில்17-வது ரோஜா கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் “இந்த ஆண்டு கோடை சீசனுக்காக மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக் கட்டுபாட்டில் உள்ள அனைத்துப் பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கிவிட்டன. கடந்த மார்ச் கோடை விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கோடை விழா நடத்தப்படும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன.
இதன்படி மே 2, 3 ஆகிய தேதிகளில் 11வது காய்கறிக் கண்காட்சி 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 17வது ரோஜா கண்காட்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர்க் கண்காட்சி மே15 ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை ஐந்து நாள்கள் நடத்தப்படும். இறுதியாக 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 62வது பழக்கண்காட்சி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன” என்றனர்.
வரலாற்றில் முதன் முறையாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை உட்பட அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டன. புகழ்பெற்ற மலைரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கோடை சீசன் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடியது. ஆனால் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்க்கத்தான் ஆளில்லை.