கொல்கத்தாவை சேர்ந்த சமூகசெயற்பாட்டாளர் Netai Chandra Ghosh (வயது 52) கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 38 நாள்கள் வெண்டிலேட்டரில் இருந்து மறுபிறப்பு எடுத்து வந்துள்ளார். கொரோனா நோயாளிகள் நீண்ட நாள்கள் வெண்டிலேட்டரில் இருந்து உயிர்பெற்று திரும்புவது என்பது மிகவும் அரிதாகவே நடக்ககூடியது. உண்மையில் இதனை அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பசியால் தவிக்கு ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணியை சந்திர கோஸ் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மார்ச் 29-ம் தேதி இவருக்கு அதிகப்படியான காய்ச்சலும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதித்த போது இவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மே 2-ம் தேதி வரை தொடர்ந்து வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏப்ரல் 15-ம் தேதி கொரோனா நெகடிவ் என சோதனையில் தெரியவந்தது. மருத்துவ நெறிமுறைகளின்படி தொடர்ந்து ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளார். மே 2-ம் தேதிக்கு பிறகு 12 மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மே 5-ம் தேதிக்கு பிறகு வெண்டிலேட்டர் உதவியின்றி சாதாரணமாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்
“எனக்கு இந்த புதிய வாழ்க்கையை கொடுத்த மருத்துவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது எனக்கு இரண்டாவது வாழ்க்கை. மருத்துவர்கள் இல்லையென்றால் நான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தான் உண்மையாக நாயகர்கள்” என சந்திர கோஸ் கூறியுள்ளார்.
அவரது மனைவி பேசுகையில், “ நாங்கள் எங்கும் பயணங்கள் எல்லாம் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவருக்கு இருந்த அறிகுறிகள் கொரோனா நோய்த்தொற்றுடன் பொருந்தியதால் மார்ச் 29-ம் தேதி தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அன்றிரவே அவரை வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். அடுத்த நாள் காலையில் எடுக்கப்பட்ட சோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அப்போது இருந்தே மரணத்துடன் போராடத் தொடங்கிவிட்டார்.
அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால் தொடர்ந்து அவர்கள் போராடினர். நான் அவரை மீண்டும் பார்ப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. கடவுளிடம் அவருக்காக வேண்டிக்கொண்டேன். அவர் ஒரு சமூக சேவகர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த காலங்களில் அவர் செய்த உதவிகளும் அவர்களின் பிரார்த்தனைகளும்தான் அவரை உயிர்பிழைக்க வைத்தது என நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.