சேலத்தில் கூலி தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் அப்ரோஸ். இவருக்கு இம்தியாஸ் என்ற மனைவியும் நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். டீக்கடை ஒன்றில் கூலி வேலை செய்து வந்த அப்ரோஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருவாய் இழந்து உணவுக்கே வழியின்றி தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அவரது குடும்பத்தினர் தூங்கி எழுந்து பார்த்த போது வீட்டிலேயே அப்ரோஸ் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த குச்சிப்பாளையம் காவல் நிலையத்தை சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வறுமை காரணமாகவே அப்ரோஸ் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.