சென்னையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பிய போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மனித இனத்திற்கே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். இதற்கு இன்னும் எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. மற்ற மருந்துகளைக் கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாட்டின் மருத்துவத்துறையும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன.
இவ்வாறு நிலைமை இருக்க பலர் சமூக வலைத்தளங்களில் கொரோனாவுக்கு மருந்து என பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களை அனைத்து அரசுகளும் எச்சரித்துள்ளன. தமிழகத்திலும் சுகாதாரத்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வதந்தியாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக விளம்பரம் செய்துள்ளார். இவர் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சென்னை காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.