சென்னையில் 56 வயது நபர் கொரோனா வைரஸால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபருக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மேல்சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
முன்னதாக, சென்னை வியாசர்பாடி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 12ஆயிரத்து 863 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 527 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருவாரியான நபர்கள் கோயம்பேடு சந்தை மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 550 அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் ஆண்களே. ஒரே நாளில் தொற்றுக்கு ஆளாகியவர்களில் 377 பேர் ஆண்கள், 150 பேர் பெண்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2ஆயிரத்து 107 பேரே தற்போது சிகிச்சையில் உள்ளனர். மற்ற ஆயிரத்து 409 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைந்தவர்கள் விகிதம் 39 புள்ளி 7 சதவிகிதமாக உள்ளது. ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று உறுதியானவர்களில் இன்று ஒருவர் உயிரிழக்க, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 87 ஆக குறைந்துள்ளது.