தஞ்சாவூரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் வர்த்தக சங்க நிர்வாகியைத் தாக்கியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தச் சம்வம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் எஸ்ஐ விஜய் கிருஷ்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த விஜய் கிருஷ்ணன் என்பவர் வர்த்தக சங்க துணைத் தலைவர் பேபிகுமார் என்பவரை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பேபிகுமார் கை உடைந்தது. தற்போது அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்

இது தொடர்பாக பேபிகுமாரின் சகோதரர் ரமேஷ் என்பவரிடம் பேசினோம், “சில மாதங்களுக்கு முன்பு ஒரத்தநாடு கடைவீதியில் பால்கடை நடத்திவரும் ஐயப்பன் என்பவர், ஆட்டோவிலிருந்து பால் பெட்டிகளை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது விஜய்கிருஷ்ணன், ஐயப்பனை தாக்கியதுடன், தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அந்தச் சமயத்தில், இது தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகள் டிஎஸ்பி-யிடம் புகார் அளித்தனர்.

சிகிச்சையில் பேபிகுமார்

அதன் பிறகு சில தினங்கள் கழித்து, மீண்டும் பால்கடைக்கு வந்த எஸ்ஐ விஜய் கிருஷ்ணன், என்மீதே புகார் கொடுக்குறீயா என கேட்டு கடையில் இருந்த ஐயப்பனைத் தாக்கினார். இதைத் தடுத்த பக்கத்து கடைக்காரர் பாலா என்பவரையும் அடித்தார். இதையடுத்து, ஒரத்தநாடு வர்த்தக சங்க நிர்வாகிகள், எஸ்பி மகேஸ்வரன், டிஜஜி லோகநாதனிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட டிஐஜி, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால் எஸ்ஐ, ஒரத்தநாடு காவல் நிலையத்திலேயே பணிபுரிந்துவந்தார்.

அத்துடன், வார்த்தக சங்க நிர்வாகி மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு காய்கறி வாங்குவதற்காக கடைவீதியில் நின்றுகொண்டிருந்த பேபி குமாரிடம் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விஜய்கிருஷ்ணன், கடுமையாகப் பேசியுள்ளார். அதை பொருட்படுத்தாமல், உடனே வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் பேபி குமார்.

பின்னர், தொடர்ந்து வந்து வழிமறித்த விஜய் கிருஷ்ணனிடம், ` “சார் அடையாள அட்டை வைத்திருக்கிறேன்” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, `என்ன திமிரா பார்க்கிற’ என அறைந்துள்ளார். `சார் நான் வர்த்தக சங்கத்துல பொறுப்பில் இருக்கேன். ஏன் இப்படி நடந்துக்குறீங்க?’ என கேட்க, வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று கம்பால் அடித்துள்ளார். இதில் பேபிகுமாருக்கு இடதுகை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தார். வலியால் துடித்த குமாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

இந்தத் தகவலறிந்த வர்த்தக சங்க நிர்வாகிகள், காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அத்துடன், டிஎஸ்பி செங்கமலக்கண்ணனிடம் நேரடியாகாவும், உயர் அதிகாரிகளுக்கு புகாரும் அனுப்பினோம். உடனடியாக விஜய் கிருஷ்ணன் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்” என்றார்.

பேபி குமார்

இதுகுறித்து எஸ்ஐ விஜய் கிருஷ்ணனிடம் பேசினோம், “ஏன் ரோட்டில் நிற்கிறீங்க என்றுதான் கேட்டேன். அதற்கு பதில் சொல்லவில்லை. அதனால் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றேன். அவர்கள் நடந்ததை மிகைப்படுத்திச் சொல்கின்றனர்” என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.