கொரோனா பீதி உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தங்கம் மறுபுறம் உலகப் பொருளாதாரத்தில் தன் பிடியை இறுக்கிக்கொண்டே செல்கிறது. உலகெங்கும் நகைக் கடை உள்ளிட்ட வணிகங்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் தங்கம் விலை சத்தமின்றி விறுவிறுவென உயர்ந்து வருகிறது.
தங்கம் என்பது கழுத்திலும் காதுகளிலும் மின்னும் வெறும் உலோகம் மட்டுமல்ல.உலக பொருளாதாரத்தையே பின்னிருந்து இயக்கும் அச்சாணிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. தொழிற்துறை நசிந்து, பங்குச்சந்தைகள் பாதாளத்தில் விழும்போதும், உலக நாடுகளின் பண மதிப்பு சரியும் போதும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நம்பிக்கொட்டுவதும் தங்கத்தில் தான். உலக நாடுகளின் பொருளாதாரத்தை கொரோனா முடக்கி கொண்டிருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் தற்போது மீண்டும் தங்கத்தை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளனர்.
உலகம் தழுவிய முடக்கங்களால் பொருள் வடிவில் தங்கம் விற்பனை நடைபெறாத நிலையில் ஊக வணிகம் போன்ற பொருள் சாரா வடிவில் ஆன்லைன் மூலமாக விற்பனை அனல் பறக்க பரபரப்பாக நடந்து கொண்டுள்ளது. தங்கம் பொருள் வடிவில் விற்கப்படாவிட்டாலும் அதன் விலை மட்டும் மாறிக்கொண்டே இருக்க இது முக்கிய காரணம்
ஆன்லைனில் அமோகமாக தங்க வணிகம் நடந்து வரும் நிலையில் இந்தியாவில் அதன் விலையும் விறுவிறுப்பாக உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு அட்சய திருதியை நாளில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் 3022 ரூபாய்க்கு விற்ற நிலையில் அது இந்தாண்டு முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் நாளில் 3,952 ரூபாயை எட்டியது.
தற்போது அது மேலும் அதிகரித்து 4,166 ரூபாயை தொட்டுள்ளது. அதாவது ஓராண்டில் தங்கம் விலை கிராமுக்கு சுமார் 1,100 ரூபாய் அதிகரித்துள்ளது. சீனா போன்ற நாடுகளின் சாமானிய மக்கள் வரை தங்கம் வாங்க பேரார்வத்துடன் உள்ளனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல்: ஏசி பயன்படுத்துவது குறித்து வழிமுறைகள் வெளியீடு!