கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் தமிழக அரசு விதித்த முழு முடக்கம் அமலுக்கு வந்தது. பெருநகரங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் அமலுக்கு வந்துள்ள முழு முடக்கம் வரும் 29ஆம் தேதி இரவு 9 மணி வரை நான்கு நாட்களுக்கு அமலில் இருக்கும்.
மேலும் திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு விழாக்கள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் ஒன்று கூட கூடாது என்பதற்காக திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.