இன்று உலகம் முழுவதும் சைவநெறி தழைத்து செழிப்பதற்குக் காரணமானவர்கள் 63 நாயன்மார்கள். அவர்களின் தியாகமே இன்றளவும் மெய் பக்தர்களுக்கு இலக்கணமாக விளங்குகிறது. 63 நாயன்மார்களில் ஒருவர் சிறுத்தொண்டர். காவேரி வளநாட்டின் திருச்செங்கோட்டங்குடியில் தோன்றியவர். இயற்பெயர் பரஞ்சோதியார்.
சிவனடியார்களை வணங்கும் பொழுது தன்னை மிகச்சிறியராக எண்ணிப் பணிந்து வழிபட்டதால் இவருக்கு சிறுத்தொண்டர் என்னும் பெயர் வந்தது. சிறுத்தொண்டரின் உண்மை அன்பினைச் சோதிக்க விரும்பிய சிவபெருமான் பைரவசுவாமியாக வேடம் தரித்து திருச்செங்கோட்டங்குடியை அடைந்தார். சிறுத்தொண்டரின் வீட்டை அடைந்தபோது அங்கு அவர் இல்லை என்பதால், ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் தனியே புகமாட்டேன் ” என்று சிறுத்தொண்டரின் மனைவியிடம் கூறிவிட்டு கணபதீச்சரத்து அத்தி மர நிழலிலே சென்று அமர்ந்தார் அடியவர்.
Also Read: `என் கடன் பணி செய்து கிடப்பதே’ – உழவாரப் பணி செய்து, இறைவனின் உள்ளம் கவர்ந்த நாவுக்கரசர் குருபூஜை!
வீடு திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவர் வந்துபோனதை அறிந்து அவர் காத்திருக்கும் இடம்நோக்கி விரைந்தார். தன் வீட்டில் வந்து திருவமுது உண்டு அருள் புரியுமாறும் வேண்டிக்கொண்டார். அதற்கு அவர், “ ஆறுமாதத்துக்கு ஒருமுறை, ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை மட்டுமே நாம் உண்பது வழக்கம்” எனக் கூறினார் அவர். இதைக்கேட்டு வீடு சென்று நடந்ததை மனைவிடம் கூற இருவரும் தங்கள் புதல்வனையே அச்சிவனடியாருக்கு அரிந்து கறிசமைத்து விருந்தளிக்க முடிவு செய்தனர்.
வீடு வந்த அடியவர் படைக்கப்பட்ட கறியினைக் கண்டு தலைக்கறியை எங்கே என்று கேட்க வீட்டில் வேலை செய்யும் சந்தனத்தாதியார் அதைக் கொண்டு வந்து படைத்தார். பின்னர் தன்னுடன் உணவு உண்ண மற்றுமொரு அடியாரை அழைக்கச் சொல்ல யாருமில்லாததை என்று தானே உட்கார்த்தார் சிறுத்தொண்டர். மேலும் அவர்களின் புதல்வனையும் அங்கு வருவாறு சொல்ல “இப்போது அவன் உதவான்” என்றார் சிறுத்தொண்டர். அதைக் காதுகொடுக்காது அடியார் மறுபடியும் வற்புறுத்தவே வீட்டின் வெளியே சென்ற அவரின் மனைவி தன் மகனை அழைத்து ஓலமிட்டார்.
Also Read: திருவருளும் குருவருளும் வழங்கும் காரைக்காலம்மையாரின் குருபூஜை இன்று!
பள்ளிக்குச் சென்று திரும்பும்வது போன்று மகன் சீராளத்தேவன் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டினுள் சமைத்த கறியையும் சிவனடியாரையும் காணாமல் திகைத்தனர். அப்போது அவர்கள் முன் சிவபெருமான், உமையம்மை, முருகப்பெருமான் ஆகிய மூவரும் தரிசனம் தந்து சிறுத்தொண்டரை ஆசீர்வதித்து அருளினார்.
சிலிர்ப்பூட்டும் சிறுத்தொண்டரின் பக்தியைப் போற்றி வணங்க உகந்த சித்திரைப் பரணி நட்சத்திர நாள் இன்று. சித்திரை பரணி நட்சத்திர நாளே சிறுத்தொண்டரின் குருபூஜை நாள். வழக்கமாக சிவாலயங்களில் இந்த பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால் தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில் விசேஷ பூஜைகள் நடைபெற இயலாமலும் சிவாலயம் சென்று தொழ இயலாமலும் இருக்கிறது. எனவே இந்த நாளில் நாம், வீட்டிலேயே சிவபுராணம் பாடி சிவபெருமானை வணங்கி நாயன்மார்களையும் போற்றி, பதிகம் பாடி இறையருளையும் குருவருளையும் பெறுவோம்.