கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 3-ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் இருக்குமா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், சேலம் மாநகராட்சிகளில் சில நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்போவதாக தமிழக அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவ மற்றும் சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
Also Read: `டேங்கர் லாரி… படகுப் பயணம்… தலைக்கு ரூ.500 முதல் 1,000’ – ஆந்திர போலீஸார் வேதனை
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆய்வில் கிராமப்புறங்களில் நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நகர்ப்புறங்களில் குறிப்பாக மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் இந்த நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மருத்துவ மற்றும் சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் சில முடிவுகளை அரசு எடுக்கவுள்ளது.
தமிழகத்தில் 5 மாநகராட்சிகளில் கொரோனா முழுஊரடங்கு அமல்!
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26.04.2020 காலை 6 மணி முதல் 29.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 26.04.2020 முதல் 28.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
-
மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறும்.
-
அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
Also Read: கோவை சிம்ப்ளிசிட்டி இணையதள ஊடக உரிமையாளர் கைது..! – நடந்தது என்ன?
-
மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளும் அத்தியாவசியப் பணிகளுக்கு 33 சதவிகிதப் பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
-
அம்மா உணவகங்கள், ஏடிஎம்.கள் வழக்கம் போல செயல்படும்.
-
உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
-
முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படும். ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
-
ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
-
கோயம்பேடு போன்ற மொத்தக் காய்கறிச் சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
Also Read: கொரோனாவால் முடங்கிய சுகாதாரத்துறை செயலர்… ஒரு மாதம் கழித்து கிடைத்த அமைச்சர்… கதி கலங்கிய ம.பி!
மேற்கண்ட நாள்களில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை. மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட எந்த இதர அலுவலகமும் செயல்படாது. மேற்கண்ட மாநகராட்சிகளைத் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும். இந்த 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் ஏற்கெனவே உள்ள நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
இந்தத் தடையை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.