கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டிப் பகுதியில் ஓட்டலில் போலீஸார் அத்துமீறியதாகப் புகார் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓட்டல்களில் பார்சல் வழங்கலாம் எனக் கூறிய நிலையில் காவலர்கள் ஓட்டலில் பிரச்னை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலாளரும் சமூக ஆர்வலருமான காளியப்பன் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு காரணமாக ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரையிலும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் பார்சல் மட்டும் விற்பனை செய்யலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணத்திட்டைப் பகுதியில் சிறிய ஓலைக்கூரையால் வேயப்பட்ட டிபன் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இக்கடைக்கு இன்று காலையில் சென்ற போலீஸார் டிபனுக்காகத் தயாரித்து வைத்த சட்னியினை, பாலில் கொட்டியும், உணவு தயாரிக்கப் பயன்படுத்துகின்ற பாத்திரங்களைக் கீழே தள்ளியும், கேஸ் ஸ்டவ்வின் டியூபினைத் துண்டித்தும் அத்துமீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திட்டுவிளை பஸ் நிலையம் அருகேயும் வேறு ஒரு இடத்தில் இயங்கி வருகின்ற புரோட்டா கடையும் எந்தவித தனிமனித இடைவெளியினைக் கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு கடையிலும் ஏழுக்கும் மேற்பட்ட வேலையாட்கள் மதியம் 2 மணியிலிருந்து வேலை பார்க்கின்றனர்.
இதுபோன்று இப்பகுதியில் இயங்கி வருகின்ற பிரி மார்ஜின் கடையில் அரசின் கட்டுபாட்டை மீறி பொதுமக்கள் கடையின் உள்ளே சென்று பொருள்களை உள்ளே சென்று வாங்கிச் செல்கின்றனர். இதனால் ஏழைகளுக்கு ஒரு கட்டுப்பாடும் வசதியானவர்களுக்கு ஒரு கட்டுப்பாடும் எனக் காவல்துறையினர் பாரபட்சம் காட்டுவதாக சந்தேகம் எழுகிறது.
குமரி மாவட்ட காவல்துறை கொரோனா நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்று வருகின்ற நிலையில் பூதப்பாண்டி காவல்நிலைய போலீஸார் ஏழை டிபன் கடைக்காரரிடம் இவ்வாறு நடந்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.
இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “ஓட்டல்களில் உணவு தயாரிப்பதில் தவறு இல்லை. நாங்கள் சென்ற ஓட்டல்களில் டீ தயாரித்தார்கள். எனவே இதுவரை எட்டு ஓட்டல்களில் உள்ள கியாஸ் ஸ்டவ்களைப் பறிமுதல் செய்துள்ளோம்.
இந்த ஓட்டல்கள், ஏற்கெனவே நாங்கள் எச்சரித்தும் டீ போடுவதை நிறுத்தவில்லை. ஆகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றபடி பொருள்கள் எதையும் சேதப்படுத்தவில்லை” என்றார்.
இந்தநிலையில்,` விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகியின் குற்றச்சாட்டு காவல்துறைக்கு எதிரான தவறான பிரசாரம்’ என குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் செய்தியாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.