வறுமையில் வாடும் விநியோகஸ்தர்களின் நலனுக்காக ராகவா லாரன்ஸ் ரூ 15 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம் 1 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சினிமாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முழு முடக்கத்தால் சினிமாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெப்சி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உதவ முன் வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்பட நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி, மக்கள் அரசுக்கு நிதி தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று கடந்த வாரம் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக மொத்தம் 3 கோடி ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் “கொரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் நிதிக்கு 50 லட்சம் வழங்கி உள்ளேன். மேலும் தமிழக முதல்வரின் நிதிக்கு 50 லட்சம் வழங்கியுள்ளேன். பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்சமும் நடன இயக்குநர்கள் அமைப்புக்கு 50 லட்சமும் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு 25 லட்சமும் நான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியிலுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு 75 லட்சமும் வழங்கியுள்ளேன். மற்றும் அவர்களின் தேவைக்கான உணவுகளை வழங்குவதில் காவல்துறை உதவினர். அவர்களின் உதவி சிறப்பாக இருந்தது” என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்களின் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ .15 லட்சம் வழங்கியுள்ளார். அவர் இந்த உதவியைச் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தரிடம் வழங்கியுள்ளார். வறுமையில் வாடும் விநியோகஸ்தர்களின் நலனுக்காக இந்த நன்கொடையை லாரன்ஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.