சீனாவின் மீன் சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் அவ்வாறு ஏற்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. வூஹான் மாகாணத்தில் உள்ள HUANNAN மீன் சந்தையில் பணிபுரியும் நபரே கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்ட “PATIENT ZERO” என அடையாளப்படுத்தப்பட்டார். இதையடுத்து, சீன ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்பக் கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 41 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், 27 பேர் மீன் சந்தையால் நேரடியாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மீதமுள்ளவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.
இதேபோல் ஜனவரி இறுதியில் இரண்டாம் கட்டமாக 99 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில், 49 பேர் மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால், மீதமிருந்த 50 பேருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது? என்பது ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை.
இதன்மூலம், கொரோனா வைரஸ் வூஹான் மீன் சந்தையிலிருந்து தான் பரவியது என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என வளைகுடா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வூஹானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து கொரோனா பரவியதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை சீனா மறுத்துவிட்டது. அதேசமயம், அங்குள்ள மீன் சந்தையிலிருந்தே கொரோனா பரவியது என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் உருவானது, தொற்று நோயாக மாறியது, மனிதர்களிடம் பரவிய காலம் தொடர்பான ஆய்வுகளில் உள்ள இடைவெளி, எதிர்வரும் ஆராய்ச்சிகளால் நிரப்பப்படும்போதுதான், கொரோனா வைரஸ் எப்படி பரவியது? என்பதற்கான அறிவியல்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.